தீயணைப்பு படைவீரர்களுக்கான மண்டல அளவிலான போட்டிகள்


தீயணைப்பு படைவீரர்களுக்கான மண்டல அளவிலான போட்டிகள்
x
தினத்தந்தி 22 Aug 2019 10:30 PM GMT (Updated: 22 Aug 2019 8:27 PM GMT)

கரூரில் தீயணைப்பு படைவீரர்களுக்கான மண்டல அளவிலான துறை சார்ந்த போட்டிகள் தொடங்கி நடந்தது.

கரூர்,

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட தீயணைப்பு மீட்பு பணிகள்துறை சார்ந்த போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதனை திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் ப்ரியா ரவிசந்திரன் தொடங்கி வைத்தார். இதில் திருச்சி, பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு படைவீரர்கள் குழுவினர் பங்கேற்றனர். இதில் கரூர்-பெரம்பலூர் மாவட்ட வீரர்கள் ஒரு அணியாகவும், மற்ற மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் தனிதனி அணியாகவும் பங்கேற்றனர்.

தண்ணீரை பீய்ச்சி அடித்தல்

இதில் தந்திரமுறை கதம்ப பயிற்சி போட்டியில், தீயணைப்பு வீரர்கள் துரிதமாக பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டு மீட்பு பணியை மேற்கொண்டு நுரை தணிப்பான் சிலிண்டர் மூலம் தீயை அணைப்பது உள்ளிட்டவற்றை செய்தனர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தல், ஏணியை தூக்கி கொண்டு சென்று மீட்பு பணியை மேற்கொள்ளுதல் ஆகிய துறை சார்ந்த தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்பட்டன.

நாளை பரிசளிப்பு நிகழ்ச்சி

தீயணைப்புத்துறை அதிகாரிகள் நடுவர்களாக செயல்பட்டு, துறைசார்ந்த போட்டியில் வீரர்களின் செயல்பாடுகளை கண்காணித்து ஊக்கப்படுத்தினர். இதில் கரூர் மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி விவேகானந்தன் மற்றும் கரூர் நிலைய அதிகாரி விஜயகுமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) கயிறு ஏறுதல், கைப்பந்து, ஓட்ட பந்தயம், கால்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. அதனை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 

Next Story