குமரியில் 4 இடங்களில் ப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


குமரியில் 4 இடங்களில் ப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2019 11:00 PM GMT (Updated: 22 Aug 2019 8:59 PM GMT)

ப.சிதம்பரம் கைதை கண்டித்து குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனையடுத்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கைது செய்தனர். இந்த செயலுக்கு காங்கிரஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜான் சவுந்தர், நகர தலைவர் அலெக்ஸ், துணை தலைவர்கள் ராஜதுரை, மகேஷ்லாசர், வட்டார தலைவர்கள் காலபெருமாள், வைகுண்டதாஸ், அசோக்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் குளச்சல் காமராஜர் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் தலைமை தாங்கினார். துணை தலைவர் கிறைஸ்ட் ஜெனீத், நகர தலைவர் ஸ்வீட்டன், கோபிகா, விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவாதள தலைவர் ஜெரோம், ரீத்தாபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் மேரி ஸ்டெல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல், திங்கள்நகர் பஸ் நிலையம் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். குருந்தன்கோடு வட்டார தலைவர் ஜெரால்டு கென்னடி, மேற்கு வட்டார தலைவர் கிளாட்சன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெமினேஷ், மனோகர்சிங், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் பால்மணி தலைமை தாங்கினார். குழித்துறை நகர தலைவர் அருள்ராஜ், மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் தம்பி விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story