டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டும்; தமிழக அரசுக்கு டீமா சங்கம் கோரிக்கை


டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டும்; தமிழக அரசுக்கு டீமா சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2019 10:45 PM GMT (Updated: 23 Aug 2019 2:04 PM GMT)

டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு டீமா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூர்,

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தின் தொழில் நிலையை மேம்படுத்தும் வகையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தமிழக முதல்–அமைச்சருக்கும், அந்த குழுவினருக்கும் டீமா சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக அரசின் இந்த முயற்சி பெரிதும் வரவேற்கத்தக்கது. இந்த முயற்சியால் தமிழகத்தின் தொழில் நிலையில் நிச்சயம் பெரிய அளவில் மாபெரும் முன்னேற்றம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அளவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்கி கொண்டிருக்கும் ஜவுளித்துறையையும் குறிப்பாக, ஆண்டுக்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி, சுமார் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான உள்நாட்டு வர்த்தகம் செய்து வரும் திருப்பூர் நகரமும், மத்திய, மாநில அரசுகளின் சிறப்பு கவனத்தை பெற்றால், தமிழக தொழில் வளர்ச்சி மட்டுமின்றி இந்திய அளவிலான தொழில் வளர்ச்சியும் சிறப்பு பெறும் என்பது உறுதி.

திருப்பூரை பொறுத்தவரை நேரடியாக சுமார் 5 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 10 லட்சம் பேர் தொழில் மற்றும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார்கள். அடிக்கடி ஏற்படும் நூல் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை, மூலப்பொருள் விலை உயர்வு, நேர்முக மற்றும் மறைமுக வரியினங்கள் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு இடையே பின்னலாடை தொழில் துறையினர் சிக்கி தவித்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் பின்னலாடை தொழில் மற்றும் பின்னலாடை துறைக்கென தனிவாரியம் அமைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து, இந்த தொழில்துறைக்கென தனி ஆராய்ச்சி பணிகளை தொடங்க வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். தொழில் நிலையை மேம்படுத்த முடியும். திருப்பூரில் மேலும், மேலும் ஜவுளிப்பூங்கா போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக, பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு இந்த திட்டங்களை கொண்டு சென்று, அங்கு புதிய மலர்ச்சியை உருவாக்கலாம்.

இதனால் தொழில் விரிவடையும். வளர்ச்சியும் அடையும். ஏனென்றால் திருப்பூரில் தற்போது 40 சதவீத தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை நிலவுகிறது. முன்னாள் முதல்–அமைச்சர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் தொழிலாளர்களின் நலனுக்காக டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நேரத்தை குறைத்தார். தற்போது உள்ள அரசும் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் மற்றும் ஆரோக்கியம் மேம்பட மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டும். இதன் காரணமாக தொழில்நிலை உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி போன்றவை மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போதுள்ள மந்தநிலை மற்றும் தொழில் தேக்கநிலை காரணமாக ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி வருகின்றன. இந்நிலை தடுக்கப்பட வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு வரவுள்ள இந்நிலையில், உள்ளூரில் உள்ள தொழில்முனைவோருக்கு நல்ல நம்பிக்கையையும், ஒத்துழைப்பையும், ஆதரவையும் அரசு வழங்க வேண்டியது அவசியம். இந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு திருப்பூர் பின்னலாடை தொழிலையும், தமிழகத்தின் ஜவுளித்தொழிலையும் பாதுகாத்து, வளர்ச்சிபாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story