இலங்கையில் இருந்து ராமநாதபுரம் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினார்களா? “உச்சகட்ட உஷார்நிலை” என போலீஸ் சூப்பிரண்டு பேட்டி


இலங்கையில் இருந்து ராமநாதபுரம் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினார்களா? “உச்சகட்ட உஷார்நிலை” என போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
x
தினத்தந்தி 23 Aug 2019 11:00 PM GMT (Updated: 23 Aug 2019 7:01 PM GMT)

இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவலை தொடர்ந்து, உச்சகட்ட உஷார் நிலையில் மாவட்டம் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. அவ்வாறு ஊடுருவியவர்கள்லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாகவும், தமிழகத்தில் முக்கிய இடங்களில் நாசவேலைகளில் ஈடுபட உத்தேசித்துள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடலோர பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறியதாவது:-

இலங்கை வழியாக சந்தேக நபர்கள் 6 பேர் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக இலங்கையில் இருந்து அவர்கள் வந்திருப்பதாக கூறியிருப்பதால் ராமநாதபுரம் மாவட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதன்காரணமாக கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய ராமேசுவரம் பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கடலோர பகுதி வழியாக யாரும் வந்துள்ளார்களா?, சந்தேகத்திற்கு இடமான முறையில் புதிய நபர்கள் யாரும் வந்து தங்கி உள்ளார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டது. தங்கும் விடுதிகள் தீவிர சோதனையிடப்பட்டன.

கடந்த 2 நாட்களில் வந்து தங்கியவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களின் அடையாள ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையும் செய்யப்பட்டது. இதுதவிர, சில கிராமங்களில் போலீசார் வீடு வீடாக சென்றும் விசாரணை மேற்கொண்டனர். புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

சோதனை சாவடிகளில் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனையிட்ட பின்னரே அனுப்பப்படுகின்றன. பாம்பன் பாலம் பகுதியில் போலீசார் ரோந்துசுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வழக்கமான போலீசார் தவிர சீருடை அணியாத போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் அனுப்பப்பட்டு, சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்று கண்காணித்து வருகிறோம். மாவட்டம் உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story