சிங்கப்பெருமாள் கோவில் அருகே வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது


சிங்கப்பெருமாள் கோவில் அருகே வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 Aug 2019 10:18 PM GMT (Updated: 23 Aug 2019 10:18 PM GMT)

சிங்கப்பெருமாள் கோவில் அருகே வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 22). இவர் மீது மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிங்கப்பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் செல்லும்போது அதே சாலையில் எதிரே 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் தலைமையில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த கொலை வழக்கில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பரத் (23), திருத்தேரி பகுதியை சேர்ந்த லோகேஷ் என்கிற கபாலி ( 25), அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த தீனா என்கிற தினகரன் (29), செட்டிபுண்ணியம் பகுதியை சேர்ந்த ராம் என்கிற ராமச்சந்திரன் (25), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 4 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதில் பரத் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி சூர்யா என்னை கத்தியால் வெட்டினார், இதில் நான் படுகாயத்துடன் உயிர் பிழைத்தேன். அதன் பிறகு சூர்யா சிறைக்கு சென்று விட்டு மீண்டும் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் நான் சூர்யாவுடன் ஏற்பட்ட பகையை மறந்தது போல் சூர்யாவுடன் நண்பர் போல் பழகி வந்தேன். ஆனால் என் மனதிற்குள் எப்படியாவது சூர்யாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. இதனால் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தேன். நேற்று முன்தினம் இரவு சரியான சந்தர்ப்பம் கிடைத்தது. இதை பயன்படுத்தி சூர்யாவை நண்பர்களுடன் சேர்ந்து பழிக்குப்பழியாக வெட்டி படுகொலை செய்தேன்.

இவ்வாறு பரத் வாக்கு மூலத்தில் கூறியதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story