விஷம் குடித்த காட்சியை வாட்ஸ்-அப்பில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த வாலிபர்; மனைவி பிரிந்து சென்ற வேதனையில் விபரீத முடிவு


விஷம் குடித்த காட்சியை வாட்ஸ்-அப்பில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த வாலிபர்; மனைவி பிரிந்து சென்ற வேதனையில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 24 Aug 2019 10:45 PM GMT (Updated: 24 Aug 2019 8:08 PM GMT)

மனைவி பிரிந்து சென்ற வேதனையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் விஷம் குடித்த காட்சியை வீடியோ எடுத்து உறவினரின் வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஈருடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 30). இவருக்கும் மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அந்த பெண், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் ஆரோக்கியராஜ் கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்த அவர், நேற்று முன்தினம் மதுபானத்தையும், விஷத்தையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்ற அவர் தனது செல்போனில் வீடியோ ஒன்றை எடுத்தார். அப்போது அந்த வீடியோவில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியபடி தான் வாங்கி வைத்திருந்த விஷத்தை மதுவுடன் கலந்து குடிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் அந்த வீடியோ பதிவை தனது உறவினர் ஒருவரின் வாட்ஸ்-அப்பிற்கு ஆரோக்கியராஜ் அனுப்பினார். இதற்கிடையே அவர் விஷம் குடித்த சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தார். வாட்ஸ்-அப் காட்சியை பார்த்த உறவினர் உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டில் உள்ள அறையில் மயங்கி கிடந்த ஆரோக்கியராஜை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ஆரோக்கியராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில் துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தான் விஷம் குடிப்பதை வீடியோ எடுத்து உறவினரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story