முத்துப்பேட்டை அருகே ஆமை வேகத்தில் நடைபெறும் பாலங்கள் கட்டும் பணி


முத்துப்பேட்டை அருகே ஆமை வேகத்தில் நடைபெறும் பாலங்கள் கட்டும் பணி
x
தினத்தந்தி 24 Aug 2019 10:30 PM GMT (Updated: 24 Aug 2019 8:17 PM GMT)

முத்துப்பேட்டை அருகே ஆமை வேகத்தில் பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மாற்று பாதை முறையாக அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் இருந்து கும்மடிதிடல் கிராமம் வரை உள்ள சாலை இப்பகுதி மக்களின் முக்கிய சாலையாகும். அதேபோல் கும்மடிதிடல் கிராமத்தில் இருந்து மன்னார்குடி வரையிலும் இந்த சாலை செல்கிறது. இதன்வழியாகதான் சுற்றுபகுதியை சேர்ந்த கிராம மக்கள் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டிக்கு சென்று அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

அதேபோல் இப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் வேலைக்கு தினமும் செல்வதுடன் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சாலையில் உள்ள உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அருகே தேவதானம் கிராமத்தில் இருந்து வரும் நாச்சிக்குளம் பாசன வாய்க்கால் பாலம், பறவைகள் சரணாலயம் ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்கால் பாலம் ஆகிய 2 பாலங்கள் கட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பாலங்கள் கட்டும் பணி

இதை தொடர்ந்து தற்போது 2 பாலங்கள் கட்டுமானப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. ஆனால் தற்போது ஆமை வேகத்தில் பணி நடந்து வருகிறது. இதனால் முன்பு இருந்த பழைய பாலத்தை இடித்து விட்டு அதற்கு மாற்று பாதை அமைக்கப்பட்டது. இந்த மாற்று பாதை முறையாக அமைக்கவில்லை. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி கொள்வதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மாற்று பாதை சேறும், சகதியுமாக காணப்படுவதால் வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்கின்றன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாற்று நடவடிக்கைகளையும் செய்யவில்லை. மழையால் மாற்று பாதை சேதமடைந்துள்ளதால் மன்னார்குடி, சித்தமல்லி, புத்தகரம் கும்மடிதிடல், உதயமார்த்தாண்டபுரம் பகுதிக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. இதனால் அந்த பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்வதில்லை.

துரிதப்படுத்த வேண்டும்

அனைத்து பஸ்களும் சித்தமல்லி கிராமத்தில் இருந்து முத்துப்பேட்டைக்கும், மறுபுறம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி சாலையில் இருந்து வரும் பஸ்கள் உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவில் வந்து திரும்பி செல்கிறது. இதனால் பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பஸ்கள் ஏறி செல்கின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலங்கள் கட்டும் பணியை பார்வையிட்டு பணியை துரிதப்படுத்த வேண்டும். மேலும் பாலங்கள் கட்டும் பணிகள் முடிவடையும் வரை தரமான மாற்றுபாதை அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story