நாகர்கோவில் அருகே விபத்து மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு


நாகர்கோவில் அருகே விபத்து மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
x
தினத்தந்தி 24 Aug 2019 11:00 PM GMT (Updated: 24 Aug 2019 8:55 PM GMT)

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில், பலியான வாலிபர் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலகிருஷ்ணன்புதூர்,

ஈத்தாமொழியை அடுத்த நங்கூரான்பிலாவிளையை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23), ஏ.சி. மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு நாகர்கோவிலில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனி பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்வரன் என்பவர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார்த்திக் தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்தார்.

சாவு

உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து, கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற ராஜேஷ்வரனை தேடி வருகிறார்கள்.

திடீர் போராட்டம்

இந்தநிலையில் கார்த்திக் இறந்த தகவலை அறிந்த அவருடைய உறவினர்கள் நேற்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் விபத்துக்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும். விபத்தில் இறந்த கார்த்திக் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் கார்த்திக் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விபத்துக்கு காரணமானவர் மீது நடவடிக்கை மேற்கொள்வதாகவும், கார்த்திக் குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் கார்த்திக் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story