திண்டிவனத்தில், ரெயில்முன் பாய்ந்து ஏ.சி. மெக்கானிக் தற்கொலை


திண்டிவனத்தில், ரெயில்முன் பாய்ந்து ஏ.சி. மெக்கானிக் தற்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2019 10:45 PM GMT (Updated: 25 Aug 2019 5:28 PM GMT)

திண்டிவனத்தில் ஏ.சி. மெக்கானிக், ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல்-1 முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் முகமது உசேன்(வயது 26). ஏ.சி. மெக்கானிக்கான இவர், சென்னையில் வேலை பார்த்து வந்தார். இதற்காக இவர் தினமும் திண்டிவனத்தில் இருந்து ரெயிலில் சென்னைக்கு வேலைக்கு சென்று வந்தார். திண்டிவனம் முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் தினமும் ரெயிலில் கல்லூரிக்கு சென்று வந்தார். அப்போது முகமது உசேனுக்கும், அந்த கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இதனிடைய இவர்களது காதல் விவகாரம் தெரிந்ததும், இருவருடைய பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த முகமது உசேன், ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு சிங்கனூர் ரெயில்வே கேட்டுக்கு வந்தார். அங்கு மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு, அழுதுகொண்டே செல்போனில் யாரிடமோ? பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்றார். அப்போது இரவு 10.45 மணி அளவில் சென்னையில் இருந்து வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு முகமது உசேன் பாய்ந்தார். ரெயில் மோதியதில் தூக்கி எறியப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முகமது உசேன், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story