பெங்களூருவில் பயங்கரம் பீர் பாட்டிலால் தாக்கி கார் டிரைவர் கொலை 2 மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பெங்களூருவில் பயங்கரம் பீர் பாட்டிலால் தாக்கி கார் டிரைவர் கொலை 2 மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Aug 2019 10:00 PM GMT (Updated: 25 Aug 2019 6:34 PM GMT)

பெங்களூருவில், கார் டிரைவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்த 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில், கார் டிரைவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்த 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கார் டிரைவர் கொலை

பெங்களூரு ஜே.பி.நகர் 2-வது ஸ்டேஜ், மாரேனஹள்ளியை சேர்ந்தவர் சுனில்(வயது 32). டிரைவரான இவர், கார் ஓட்டி வந்தார். நேற்று முன் தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் சுனில் வீட்டுக்கு புறப்பட்டார். ஜே.பி.நகர் மெயின் ரோட்டில் வரும் போது 2 மர்மநபர்கள் சுனிலை வழிமறித்தனர். உடனே அவரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அந்த மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் திடீரென்று சுனிலை கண் மூடித்தனமாக தாக்கினார்கள்.

மேலும் பீர் பாட்டிலால் அவரது வயிற்றிலும் மர்ம நபர்கள் குத்தினார்கள். இதில், பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சுனில் உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்த பொதுமக்கள், சுனிலை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுனில் பரிதாபமாக இறந்து விட்டார்.

2 பேருக்கு வலைவீச்சு

இதுபற்றி அறிந்ததும் ஜே.பி.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் சுனிலின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது குடிபோதையில் இருந்த 2 பேர், சுனிலை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் அவர்கள் யார்? என்ன காரணத்திற்காக சுனிலை கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக சுனிலுக்கு தெரிந்தவர்களே, அவர்களை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான 2 மர்மநபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story