காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது நல்லகண்ணு பேட்டி


காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது நல்லகண்ணு பேட்டி
x
தினத்தந்தி 25 Aug 2019 11:00 PM GMT (Updated: 25 Aug 2019 7:05 PM GMT)

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்த கூடாது என்று நல்லகண்ணு தெரிவித்தார்.

சீர்காழி,

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதை வன்மையாக கண்டிக்கிறோம். மாநில அரசு உரிமைகளை மத்திய அரசு பறிக்க கூடாது. காஷ்மீரில் நடைபெறும் சம்பவங்களை நேரில் பார்ப்பதற்காக காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் போதிய அளவு இந்த ஆண்டு மழை பெய்யவில்லை. இந்தநிலையில் குடி மராமத்து பணியினை தமிழக அரசு விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல் கட்சிக்காரர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் விடப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனைக்கு உரியது. குடி மராமத்து பணிகளை தமிழக அரசு மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்குள் முடிக்க வேண்டும். அப்போதுதான் காவிரி நீர் கடைமடை பகுதி வரை வந்து சேரும்.

பாலைவனமாக மாறிவிடும்

காவிரி பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் சுமூக தீர்வு காண வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய அரசு ஹைட்ரோ காாபன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பாலைவனமாக மாறிவிடும்.

மத்திய அரசு காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவேண்டும். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் மோட்டார் தொழில்கள் முடக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே கட்சி, ஒரே நாடு என்பது ஆபத்தான கொள்கையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட நிர்வாகிகள் வீரராஜ், பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

Next Story