சதுர்த்தியை முன்னிட்டு குமரியில் 4 ஆயிரம் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படுகிறது


சதுர்த்தியை முன்னிட்டு குமரியில் 4 ஆயிரம் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 26 Aug 2019 10:00 PM GMT (Updated: 26 Aug 2019 2:40 PM GMT)

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படுகிறது.

நாகர்கோவில்,

நாடு முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி வருகிற 2-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி, பா.ஜனதா, இந்து மகாசபா, சிவசேனா, விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். ஆகிய இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படுவது வழக்கம். இதற்காக குமரி மாவட்டத்தில் சூரங்குடி, இரணியல் அருகே கண்ணாட்டுவிளை ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. இதற்கான முன்னேற்பாடு பணியில் இந்து அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

4 ஆயிரம் சிலைகள்

பெரும்பாலான சிலைகள் விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் இரவு பூஜைக்கு வைக்கப்படும். விநாயகர் சதுர்த்தி அன்றும் ஏராளமான சிலைகள் பூஜைக்கு வைப்பார்கள். பின்னர் அந்த சிலைகள் குறைந்தது 5 நாட்கள் முதல் 8 நாட்கள் வரை பூஜையில் வைக்கப்படும்.

அதன்படி இந்து முன்னணி சார்பில் குமரி மாவட்டம் முழுவதும் 2500-க்கும் மேற்பட்ட இடங்களிலும், இந்து மகாசபா சார்பில் 1,008 இடங்களிலும், சிவசேனா சார்பில் 200-க்கும் மேற்பட்ட இடங்களிலும், மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட உள்ளது.

கரைப்பு

பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 3 நாட்கள் கன்னியாகுமரி கடல், சொத்தவிளை கடற்கரை, சங்குத்துறை கடற்கரை போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

இதுகுறித்து இந்து மகாசபா மாநில தலைவரும், தேசிய துணை தலைவருமான த.பாலசுப்பிரமணியன் கூறுகையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை “வீடுதோறும் பிள்ளையார், வீதிதோறும் பிள்ளையார்“ என்ற கோஷத்தோடு கொண்டாட இருக்கிறோம். மாவட்டம் முழுவதும் 1008 இடங்களில் ¼ அடி முதல் 9½ அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகின்றன. பாகுபலி பிள்ளையார், சிவலிங்கத்தை தூக்கி வைத்திருப்பது போன்ற விநாயகர் சிலை, முருகப்பெருமானை அரவணைத்து வாழ்த்துவது போன்ற பிள்ளையார், மயில் வாகன பிள்ளையார், அன்ன வாகன பிள்ளையார், சிங்க வாகன பிள்ளையார் போன்ற சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட இருக்கின்றன” என்றார்.

Next Story