விதவையை காதலித்து திருமணம் செய்து வரதட்சணை கொடுமை: வேறொரு பெண்ணை 2-வதாக மணம் புரிந்து கொண்டு அதிகாரி தலைமறைவு


விதவையை காதலித்து திருமணம் செய்து வரதட்சணை கொடுமை: வேறொரு பெண்ணை 2-வதாக மணம் புரிந்து கொண்டு அதிகாரி தலைமறைவு
x
தினத்தந்தி 26 Aug 2019 10:30 PM GMT (Updated: 26 Aug 2019 6:46 PM GMT)

குண்டலுபேட்டை டவுனில், விதவை பெண்ணை தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்.

கொள்ளேகால்,

குண்டலுபேட்டை டவுனில், விதவை பெண்ணை தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். பின்னர் வரதட்சணை கொடுக்க மறுத்ததால் வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஒங்கள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுவேதா(வயது 38). இவருக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் இவருடைய கணவர் இறந்துவிட்டார். இதையடுத்து இவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். மேலும் இவர் சாம்ராஜ்நகர் தாலுகா சிக்கத்துப்பூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் அலுவலக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த சாம்ராஜ்நகர் தாலுகா ரேச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மனூஸ் ஹானுபோக்(40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சுவேதா ஒரு விதவைப்பெண் என்று தெரிந்தும் மனூஸ் ஹானுபோக் அவரை காதலித்து வந்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு சுவேதாவின் பெற்றோர் ஒப்புக்கொண்டனர். ஆனால் மனூஸ் ஹானுபோக்கின் பெற்றோர் இவர்களது திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதையடுத்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி தனது காதலியான சுவேதாவை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மண்டியா தாலுகா அனுமந்த நகரில் உள்ள ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில் வைத்து மனூஸ் ஹானுபோக் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவனும், மனைவியும் குண்டலுபேட்டை டவுன் கே.எச்.எம். காலனியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு தற்போது 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சுவேதாவிடம், வரதட்சணை கேட்டு மனூஸ் ஹானுபோக்கும், அவருடைய குடும்பத்தினரும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். மேலும் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியும் வந்துள்ளனர். வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்று சுவேதாவிடம் கூறி மனூஸ் ஹானுபோக் மிரட்டி வந்துள்ளார். ஆனால் வரதட்சணை வாங்கி வர சுவேதா மறுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாம்ராஜ்நகர் மாவட்டம் கொடசோகே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மனூஸ் ஹானுபோக் 2-வதாக திருமணம் செய்ய இருந்தார். இதுபற்றி அறிந்த சுவேதா, நேராக சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அங்கு தனக்கும், மனூஸ் ஹானுபோக்கிற்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது என்று அந்த பெண்ணிடமும், அவருடைய குடும்பத்தினரிடமும் கூறி உள்ளார். மேலும் தானும், தன் கணவன் மனூஸ் ஹானுபோக்கும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங் களையும் காட்டியுள்ளார்.

அதையடுத்து அந்த திருமணம் நின்றுவிட்டது. இதையடுத்து சுவேதாவிடம் இருந்து மனூஸ் ஹானுபோக் பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மங்களூருவில் வைத்து வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சுவேதா அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுபற்றி அவர் குண்டலுபேட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள மனூஸ் ஹானுபோக்கையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story