அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல்


அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Aug 2019 10:45 PM GMT (Updated: 26 Aug 2019 7:11 PM GMT)

அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலையை ஒரு தரப்பினர் உடைத்து சேதப்படுத்தினர். இதை கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமையில் கொள்கை பரப்பு செயலாளர் ஆதவன் மற்றும் தொண்டர்கள் நேற்று காலை புதுவை நெல்லித்தோப்பில் உள்ள சுப்பையா சிலை அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து புதிய பஸ்நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை வழியாக புதிய பஸ்நிலையத்தை அடைந்தது. அங்கு அவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் மறைமலை அடிகள் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வர முடியவில்லை.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 61 பேரை கைது செய்தனர்.

ஊசுடு தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பத்துக்கண்ணு சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. கட்சியின் தொகுதி செயலாளர் தனுஷ் என்ற இளந்தமிழன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 67 பேரை கைது செய்தனர்.

தவளக்குப்பம் 4 முனை சந்திப்பு பகுதியில் நடந்த மறியல் போராட்டத்துக்கு கட்சியின் நிர்வாகிகள் தமிழ் வளவன், கார்முகில், சுடர்வாணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்த மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனூர் அருகே குமராபாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று காலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அதுபற்றி தகவல் அறிந்ததும், காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறினார்கள். அதனை ஏற்று மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் மொத்தம் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story