அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது


அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2019 10:30 PM GMT (Updated: 26 Aug 2019 7:21 PM GMT)

அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது தா.பழூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்.

செந்துறை,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து அரியலூர் மாவட்டம் செந்துறை போலீஸ் நிலையம் அருகே தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வீரவளவன் ஆகியோர் தலைமையில் நேற்று திடீரென ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்று கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேரை கைது செய்து, அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதே போல் அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து அரியலூர் மாவட்டம் தா.பழூர் பஸ் நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். தகவல் அறிந்த தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story