திருச்சியில் பயங்கரம் வாலிபரை கொன்று உடல் எரிப்பு நண்பர்கள் 3 பேர் சிக்கினர்


திருச்சியில் பயங்கரம் வாலிபரை கொன்று உடல் எரிப்பு நண்பர்கள் 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 26 Aug 2019 10:15 PM GMT (Updated: 26 Aug 2019 8:13 PM GMT)

திருச்சியில் வாலிபரை கொலை செய்து உடலை எரித்த நண்பர்கள் 3 பேர் சிக்கினர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியை சேர்ந்த சண்முகநாதனின் மகன் தமிழழகன் (வயது 24). இவர் கடந்த 7-ந்தேதி வீட்டில் உள்ளவர்களிடம், தியேட்டருக்கு சினிமா பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

இதையடுத்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் தமிழழகனின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தமிழழகனை அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மது குடித்தபோது தகராறு

பொன்மலையை சேர்ந்த 2 பேரும், நவல்பட்டை சேர்ந்த ஒருவரும் தமிழழகனின் நண்பர்கள் ஆவர். சம்பவத்தன்று நவல்பட்டிற்கு நண்பர்களுடன் தமிழழகன் சென்றார். அங்கு நண்பரின் வீட்டின் அருகே 4 பேரும் மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் தமிழழகனை, அவர்கள் 3 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் செய்வதறியாமல் அங்கிருந்து அவரது உடலை ஆட்டோவில் எடுத்து சென்று பொன்மலை கணேசபுரம் சுடுகாட்டில் எரித்துள்ளனர். அதன்பின் ஒன்றும் தெரியாததுபோல் இருந்துள்ளனர்.

இந்தநிலையில் கொலையான தமிழழகனின் நண்பர்கள் 3 பேரும் மதுக்கடை பாரில் மது அருந்தும்போது, தமிழழகனை கொலை செய்த சம்பவம் பற்றி போதையில் உளறியுள்ளனர். இந்த தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் 3 பேரையும் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தமிழழகன் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

காரணம் என்ன?

இதற்கிடையில் கொலையான தமிழழகனின் பெற்றோர் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததால் அந்த புகார் பொன்மலை அல்லது நவல்பட்டு போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. தமிழழகனை கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

மாயமான மகன் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோரும், அவரது உறவினர்களும் நேற்று கதறி அழுதனர். உடலை எரித்த இடத்தில் தடயங்கள் எதுவும் உள்ளதா? என போலீசார் பார்வையிட்டனர். வாலிபரை நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story