வேதாரண்யத்தில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு சேதப்படுத்தப்பட்டதற்கு பதிலாக புதிய அம்பேத்கர் சிலை அமைப்பு


வேதாரண்யத்தில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு சேதப்படுத்தப்பட்டதற்கு பதிலாக புதிய அம்பேத்கர் சிலை அமைப்பு
x
தினத்தந்தி 26 Aug 2019 11:30 PM GMT (Updated: 26 Aug 2019 9:37 PM GMT)

வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டனர். 2-வது நாளாக நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சேதப்படுத்தப்பட்ட சிலைக்கு பதிலாக புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் ஒரு விபத்து தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு ஜீப்பு தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த மோதலின்போது அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜன்னல் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. வேதாரண்யம் நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. 2 பேர் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டனர்.

வன்முறை காரணமாக வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர் உள்பட பல்வேறு இடங்களுக்கு பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தின்போது வேதாரண்யத்தில் உள்ள ஒரு சில கடைகள் சூறையாடப்பட்டன. கடற்கரை செல்லும் சாலையில் உள்ள கோழிப்பண்ணை தீ வைத்து எரிக்கப்பட்டது. இரு தரப்பு மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதுதவிர அதிவிரைவு படை போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக வெளியூரில் இருந்து கொண்டு வரப்பட்ட அம்பேத்கர் சிலை நேற்று அதிகாலை கிரேன் மூலம் தூக்கி வைத்து நிறுவப்பட்டது. உடனடியாக அந்த சிலைக்கு வர்ணம் பூசப்பட்டது.

புதிதாக நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நேற்று காலை 8 மணிக்கு பிறகே வேதாரண்யத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. 2-வது நாளாக நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் தலைமையில் 750 போலீசார் நேற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதிய சிலை வைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று அங்கு இயல்பு நிலை திரும்பியது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து நாகை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Next Story