வேதாரண்யத்தில் பஸ்கள் இயங்கின; கடைகள் திறப்பால் இயல்பு நிலை திரும்பியது


வேதாரண்யத்தில் பஸ்கள் இயங்கின; கடைகள் திறப்பால் இயல்பு நிலை திரும்பியது
x
தினத்தந்தி 27 Aug 2019 11:00 PM GMT (Updated: 27 Aug 2019 6:39 PM GMT)

வேதாரண்யத்தில் நேற்று வழக்கம்போல் பஸ்கள் இயங்கின. கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பியது. அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஜீப்பில் ஒருவர் வேதாரண்யம் வந்தார். வேதாரண்யம் போலீஸ் நிை-லையம் எதிரில் வந்தபோது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது ஜீப் மோதியது. இதில் காயம் அடைந்தவர் நாகை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது போலீஸ் நிலையம் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது. அப்போது அங்கு இருந்த அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது.

பலத்த பாதுகாப்பு

அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து அங்கு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.வரதராஜூ தலைமையில், தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் மேற்பார்வையில் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், அதிரடிப்படை போலீசார் உள்பட 750-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இந்த மோதல் சம்பவம் காரணமாக வேதாரண்யத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய அம்பேத்கர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது.

கைது

இரு தரப்பினரிடையே நடந்த இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 28 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடினாலும் குறைவான அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய வழக்கில் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், லெனின் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இயல்பு நிலை திரும்பியது

வேதாரண்யத்தில் நேற்று வழக்கம்போல் பஸ் போக்கு வரத்து நடைபெற்றது. பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன. கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து நேற்று அங்கு இயல்பு நிலை திரும்பியது. ஆனாலும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Next Story