கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் - நோயாளிகள் அவதி


கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் - நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 27 Aug 2019 10:30 PM GMT (Updated: 27 Aug 2019 9:53 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

கடலூர்,

தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு டாக்டர் பணியிடங்களை அமல்படுத்த வேண்டும். பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அரசு, பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட அனைத்து அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் அரசு டாக்டர்கள் பணியாற்றவில்லை. இதனால் அந்த பிரிவுகள் டாக்டர்கள், நோயாளிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அனைவரும் வேலையை புறக்கணித்து வெளியேறினர். இருப்பினும் பயிற்சி டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவில் இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

குறைந்த எண்ணிக்கையிலான பயிற்சி டாக்டர்கள் சிகிச்சை அளித்ததால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று சென்றனர். இதனால் அவர்கள் மிகவும் அவதி அடைந்தனர். அதே நேரத்தில் எலும்பு முறிவு, அவசர சிகிச்சை, மகப்பேறு போன்ற பிரிவுகளில் டாக்டர்கள் பணியாற்றினர்.

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவ சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் தலைமையில் டாக்டர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் டாக்டர் சாமிநாதன் தலைமையில் டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மகப்பேறு விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகளில் மட்டும் டாக்டர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பணிபுரிந்தனர். மற்ற பிரிவுகளில் டாக்டர்கள் பணியில் இல்லை. நேற்று திங்கட்கிழமை என்பதால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள், சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர். பின்னர் பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேபோல் காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உள்பட மொத்தம் 11 அரசு மருத்துவமனைகள், 71 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 430 அரசு டாக்டர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் அவசர சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் செயல்பட்டதாக ஒருங்கிணைப்பாளர் கேசவன் தெரிவித்தார்.

Next Story