வேடசந்தூர் அருகே, வேன் கவிழ்ந்து டிரைவர் உள்பட 15 பேர் காயம்


வேடசந்தூர் அருகே, வேன் கவிழ்ந்து டிரைவர் உள்பட 15 பேர் காயம்
x
தினத்தந்தி 27 Aug 2019 11:00 PM GMT (Updated: 27 Aug 2019 9:53 PM GMT)

வேடசந்தூர் அருகே, வேன் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.

வேடசந்தூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக 20 பேர் கொண்ட குழுவினர் ஒரு வேனில் புறப்பட்டனர். வேனை முத்துக்குமார்(வயது 35) என்பவர் ஓட்டி வந்தார்.

வேடசந்தூர் அருகே உள்ள காக்காத்தோப்பு பிரிவில் நான்கு வழிச்சாலையில் நேற்று இரவு 10 மணியளவில் வேன் வந்துகொண்டிருந்தது. அப்போது வேடசந்தூரில் இருந்து விட்டல்நாயக்கன்பட்டிக்கு செல்லும் தனியார் மில்வேன் நான்கு வழிச்சாலையில் திடீர் என்று புகுந்ததால் தாராபுரத்தில் இருந்து வந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதில் வேன் டிரைவர் முத்துக்குமார் மற்றும் பயணம் செய்த செந்தில், சக்திவேல், அசோக்குமார் உள்ளிட்ட 15 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story