ஏரியில் எல்லை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்


ஏரியில் எல்லை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 28 Aug 2019 10:45 PM GMT (Updated: 28 Aug 2019 7:19 PM GMT)

ஏரியில் எல்லை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள காக்கவாக்கத்தில் 430 ஏக்கர் நில பரப்பில் இசா ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து அருகே உள்ள தொளவேடு, தும்பாக்கம், தொட்டாரெட்டிகுப்பம், பருத்துமேனிகுப்பம், காக்கவாக்கம், வண்ணான்குப்பம் பகுதிகளில் உள்ள 1,432 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. இந்த ஏரியில் 4 மதகுகள் உள்ளன. இந்த நிலையில் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இசா ஏரியில் தூர்வாரி கரைகளை பலப்படுத்த, மதகுகள் மற்றும் கலங்கலை சீரமைக்க தமிழக அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கியது.

இந்த நிதியை கொண்டு தற்போது கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகன், இளநிலை பொறியாளர் பிருத்விபாலசுந்தரம், ஏரி பாசன குழு தலைவர் மல்லிகார்ஜுனன் ஆகியோர் நேற்று ஏரியில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட சென்றனர்.

அப்போது தொளவேடு கிராமத்தை சேர்ந்த 100 பேர் அங்கு திரண்டு வந்து ஏரியில் எங்கள் கிரமத்துக்கும் பங்கு உண்டு. ஆகையால் ஏரியில் எல்லை அமைத்து தர வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள் தங்களது பதிவேடுகளில் காக்கவாக்கம் இசா ஏரி என்றுதான் பதிவாகி உள்ளது. எல்லை சம்பந்தமாக எங்களுக்கு எதுவும் தெரியாது. ஊத்துக்கோட்டையில் உள்ள நில அளவை அதிகாரிகளை தொடர்பு கொண்டு எல்லை பிரச்சினையை தீர்த்து கொள்ளுங்கள் என்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தொளவேடு கிராம மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஏரிக்கரையில் சவுடு மண் கொட்டிக்கொண்டிருந்த லாரிகளை தடுத்து நிறுத்தினர். தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை தாசில்தார் செல்வகுமார் போலீசாருடன் அங்கு விரைந்து சென்று தொளவேடு பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று (வியாழக்கிழமை) அளவீடு செய்வதாக உறுதி அளித்தார். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story