தொழிலாளியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - நெல்லை கோர்ட்டு தீர்ப்பு


தொழிலாளியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Aug 2019 10:45 PM GMT (Updated: 28 Aug 2019 10:26 PM GMT)

களக்காடு அருகே தொழிலாளியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள வடமலைசமுத்திரம் சங்கர்நகர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 41), கட்டிட தொழிலாளி. மேலும் லோடு ஆட்டோவும் வைத்து ஓட்டி வந்தார். இவரும், அதே ஊரை சேர்ந்த நெல்லையப்பன் என்பவரும், கடந்த 2011-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டனர். இதில் 2 பேரும் தோல்வி அடைந்து விட்டனர். சேது என்பவர் வெற்றி பெற்றார். தனது தோல்விக்கு சுப்பிரமணியன் தான் காரணம் என்று எண்ணிய நெல்லையப்பன், பாலசுப்பிரமணியன் (51), தியாகராஜன் (58) ஆகியோருடன் சேர்ந்து சுப்பிரமணியனை பழி வாங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் 18-12-2011 அன்று சுப்பிரமணியன் தனது லோடு ஆட்டோவில் சரக்கு ஏற்றிக்கொண்டு இருந்தபோது சிறுவர்கள் ஆட்டோவில் கல் எறிந்தனர். அந்த சிறுவர்களை அவர் சத்தம் போட்டார். அப்போது அங்கு வந்த பாலசுப்பிரமணியன், நீ எப்படி எனது மகனை கல் எறிந்தான் என சத்தம் போடுவாய் என்று கூறி சுப்பிரமணியனிடம் தகராறு செய்தார். அப்போது பாலசுப்பிரமணியன் தாக்கியதில் சுப்பிரமணியன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 19-12-2011 அன்று சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன், நெல்லையப்பன், தியாகராஜன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிபதி விஜயகாந்த் விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். நெல்லையப்பன், தியாகராஜன் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் துரைமுத்துராஜ் ஆஜரானார்.


Next Story