திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை-பணம் கொள்ளை


திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 29 Aug 2019 11:00 PM GMT (Updated: 29 Aug 2019 8:32 PM GMT)

திருச்சியில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் அங்கு இருந்த காரையும் ஓட்டிச் சென்றனர்.

கே.கே.நகர்,

திருச்சி கே.கே.நகர் எல்.ஐ.சி. காலனி முருகவேல் நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 74). திருச்சி பாய்லர் ஆலையில் (பெல்) அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி (71). இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 2 மகள்கள் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் டாக்டர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

ஒரு மகள் மட்டும் ஸ்ரீரங்கத்தில் வசித்து வருகிறார். மகன்களும் வெளியூர்களில் தான் உள்ளனர். எனவே வீட்டில் பெரியசாமியும், சரஸ்வதியும் மட்டுமே வசித்து வருகிறார்கள்.

பெரியசாமி துவாக்குடியில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் தினமும் காலையில் தொழிற்சாலைக்கு சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவது வழக்கம். மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார் என்பதால் பாதுகாப்பு கருதி பெரியசாமி வீட்டின் கேட் மற்றும் கதவுகளில் வெளிப்புறமாக பூட்டுப்போட்டு பூட்டிவிட்டு செல்வாராம். நேற்று காலையும் இதேபோல் வெளியில் பூட்டிவிட்டு சாவியை சரஸ்வதியிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

நகை-பணம் கொள்ளை

இந்நிலையில் மதியம் ஒரு மணி அளவில் ஒரு காரில் 4 மர்ம நபர்கள் பெரியசாமியின் வீட்டிற்கு வந்தனர். 2 பேர் காரில் அமர்ந்து கொள்ள மற்ற 2 பேரும் சுவர் ஏறி குதித்து வீட்டின் பின்புறத்திற்கு சென்றனர். பின்புற கதவில் போடப்பட்டு இருந்த பூட்டுகளை உடைத்தனர். பூட்டு உடைக்கப்படும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி உள்பக்க தாழ்ப்பாளை திறந்தார்.

அப்போது உள்ளே புகுந்த கொள்ளையர்கள் இருவரும் சரஸ்வதியின் கன்னத்தில் ஓங்கி அடித்தனர். அடி தாங்காமல் சரஸ்வதி மயங்கி விழுந்தார். உடனே கொள்ளையர்கள் அவரது கையில் அணிந்து இருந்த 2 தங்க வளையல்கள் மற்றும் காதில் இருந்த தோடுகளை கழற்றி எடுத்தனர். டி.வி. அருகில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர்.

காரையும் எடுத்தனர்

அப்போது போர்டிகோவில் சொகுசு கார் நிறுத்தப்பட்டு இருந்ததை கொள்ளையர்கள் பார்த்தனர். காரிலேயே அதன் சாவியும் இருந்தது கொள்ளையர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. உடனே அந்த காரையும் கொள்ளையர்கள், வீட்டுக்கு வந்த விருந்தாளி காரை எடுத்துக்கொண்டு போவதுபோல் சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களின் கவனத்திற்கு கூட வராத அளவில் கொள்ளையர்கள் தங்களது காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டு கிளம்பி விட்டனர்.

இந்நிலையில் மயக்கம் தெளிந்த சரஸ்வதி தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனடியாக வீட்டிற்கு திரும்பிய பெரியசாமி நடந்த சம்பவம் பற்றி கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். கே.கே.நகர் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கண்காணிப்பு கேமராக்கள்

சரஸ்வதியிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் 6¾ பவுன் ஆகும். கொள்ளையர்கள் எடுத்து சென்ற காரின் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் இருக்கும். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியசாமி வீட்டில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. ஆனால் பக்கத்து வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த வீடியோ பதிவு காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.


Next Story