நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2019 10:00 PM GMT (Updated: 30 Aug 2019 8:46 PM GMT)

நாகர்கோவிலில் மாதந்தோறும் 1-ந் தேதி ஓய்வூதியம் வழங்கக்கோரி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில், 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஓய்வு பெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும், அகவிலைப்படி நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாதந்தோறும் 1-ந் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும், வாரிசு வேலையை முறையாக வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுந்தரராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட ஓய்வூதியர் கூட்டமைப்பு துணைத்தலைவர் அல்போன்ஸ், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சின்னான்பிள்ளை, சோபன்ராஜ், அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு. செயலாளர் ஸ்டீபன் ஜெயக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். லெட்சுமணன் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

இதில் செல்வராஜாசிங், கிருஷ்ணதாஸ், சத்தியநேசன், குட்டப்பன், மூக்கையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செல்வராஜாசிங் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story