குடிநீர் வழங்கக்கோரி, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - புவனகிரியில் பரபரப்பு


குடிநீர் வழங்கக்கோரி, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - புவனகிரியில் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Aug 2019 10:45 PM GMT (Updated: 30 Aug 2019 9:45 PM GMT)

புவனகிரியில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புவனகிரி, 

புவனகிரி பேரூராட்சிக்குட்பட்டது பெருமாத்தூர் கிராமம். இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பொதுக்குழாய்கள் வழியாக தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டம் குறைந்ததோடு, அதில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் உப்பு நீராக வந்தது.

இந்த நீரை குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பெருமாத்தூர் பகுதி மக்கள் தங்களுக்கு புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிக்க ஏதுவாக தண்ணீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பெருமாத்தூர் பகுதி மக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் அங்குள்ள புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கவேண்டும் அல்லது புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் புவனகிரி பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், ஓரிரு நாட்களில் மாற்று ஏற்பாடு செய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்ளிடம் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story