ரோடியர் மில்லில் ரூ.575 கோடி நஷ்டம் - அமைச்சர் ஷாஜகான் தகவல்


ரோடியர் மில்லில் ரூ.575 கோடி நஷ்டம் - அமைச்சர் ஷாஜகான் தகவல்
x
தினத்தந்தி 31 Aug 2019 11:00 PM GMT (Updated: 31 Aug 2019 7:47 PM GMT)

ரோடியர் மில்லில் ரூ.575 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கேள்வி-பதில் நேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா எழுப்பிய கேள்வியினை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

சிவா: ரோடியர் மில் கடந்த காலங்களில் அரசு சார்பு நிறுவனங்களில் எவ்வளவு கடன் வாங்கியுள்ளது? இப்போது அதன் நிலை என்ன? எத்தனை ஆண்டுகள் கணக்கு முடிக்காமல் உள்ளது? விருப்ப ஓய்வு கொடுத்த தொழிலாளர்களுக்கு எவ்வளவு கொடுக்கவேண்டி உள்ளது?

அமைச்சர் ஷாஜகான்: பிப்டிக் நிறுவனத்திற்கு ரூ.65.47 கோடியும், மின்திறல் குழுமத்துக்கு ரூ.14.50 கோடி கடன் மற்றும் வட்டி செலுத்த வேண்டி உள்ளது. இந்த மில்லின் மொத்த நஷ்டத்தொகை ரூ.575.82 கோடியாக உள்ளது. ஆலையின் கணக்கு தணிக்கை செய்யப்படாமல் 2017-18 வரை முடிக்கப்பட்டுள்ளது 2018-19ஆம் ஆண்டின் கணக்கு முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிவா: அரசு சார்பு நிறுவனங்களில் கடன்பெறும்போது எந்தவித ஈடும் காட்டாமல் பணம் பெறப்பட்டுள்ளது. வட்டியையும், முதலையும் எப்போது தரப்போகிறீர்கள்?

அமைச்சர் ஷாஜகான்: மில்லுக்கு சொந்தமான சொத்தை விற்றுதான் தரவேண்டும். அதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த கடன் 15 முதல் 20 வருடங்களில் ஏற்பட்டுள்ளது.

சிவா: ஒரு முதல்-அமைச்சரிடமிருந்து துண்டு சீட்டு போனாலே கடன் கொடுத்துள்ளனர். அரசுத் துறையில் பணத்தை மாற்றும்போது நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. ரோடியர் மில் தொடர்பான விசாரணையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

அமைச்சர் ஷாஜகான்: விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிவா: அரசின் நடவடிக்கை என்ன? சபாநாயகர் உத்தரவிட்டால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா?

கீதா ஆனந்தன் (தி.மு.க.): மின்திறல் குழுமத்திலிருந்து 14.50கோடி எடுத்துள்ளனர்.

சபாநாயகர் சிவக்கொழுந்து: விசாரணை அறிக்கை மீது ஆய்வு செய்து முடிவு எடுக்கலாம்.

என்.எஸ்.ஜே.ஜெயபால்: விசாரணை அறிக்கையில் ஊழல் நடைபெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் நாராயணசாமி: பிப்டிக் நிறுவனத்திடமிருந்து பணம் முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது. நிதி திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். ரோடியர் மில், பாப்ஸ்கோ தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிவா: மறுபடியும் வைத்த விசாரணை என்னவானது?

அன்பழகன்: ஒரு சார்பு நிறுவன பணத்தை எடுத்து மற்றொரு கார்ப்பரேசனுக்கு கொடுப்பது தவறா?

முதல்-அமைச்சர் நாராயணசாமி: விதிமுறைக்கு உட்பட்டுதான் கொடுக்கவேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story