வெவ்வேறு இடங்களில் முதுகலை பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை


வெவ்வேறு இடங்களில் முதுகலை பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 31 Aug 2019 10:15 PM GMT (Updated: 31 Aug 2019 9:14 PM GMT)

வெவ்வேறு இடங்களில் முதுகலை பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகள் தாரணி (வயது 24). இவர் எம்.எஸ்சி. முதுகலை பட்டம் படித்துள்ளார். தாரணி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று தாரணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த பரமத்திவேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தாரணி உடல் பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சிங்கிலிபட்டி பகுதியை சேர்ந்தவர் ராமராஜன். இவருடைய மனைவி அனிதா (22). கணவன் மனைவிக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கில் தொங்கினார். இதையடுத்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டிருந்தார்.

இதைப்பார்த்து ராமராஜன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உடனடியாக மனைவியை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அனிதாவை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அனிதாவிற்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் நாமக்கல் உதவி கலெக்டர் (பொறுப்பு) பாலசுப்ரமணி விசாரணை நடத்தி வருகிறார்.

கொல்லிமலையில் உள்ள வேலிகாடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (35), விவசாயி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து செல்வகுமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story