கடலூரில், குரூப்-4 தேர்வு எழுதிய 2 பேரிடம் செல்போன் பறிமுதல்


கடலூரில், குரூப்-4 தேர்வு எழுதிய 2 பேரிடம் செல்போன் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Sep 2019 11:00 PM GMT (Updated: 1 Sep 2019 9:17 PM GMT)

கடலூரில் குரூப்-4 தேர்வு எழுதிய 2 பேரிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. உடனடியாக அவர்களை தேர்வறையை விட்டு வெளியேற்றி கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.

கடலூர், 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் உள்பட 8 பதவிகளில் காலியாக உள்ள 6491 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் 72 ஆயிரத்து 62 பேர் தேர்வு எழுதுவதற்காக கடலூர், பண்ருட்டி, சிதம்பரம் என மாவட்டம் முழுவதும் 10 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணிக்கு முடிந்தது. இதில் தேர்வு எழுத விண்ணப்பித்த 72 ஆயிரத்து 62 பேரில் 61 ஆயிரத்து 678 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 10 ஆயிரத்து 386 பேர் தேர்வு எழுத வரவில்லை. குரூப்-4 தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களை தடுப்பதற்காக துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட பறக்கும்படையினரும் தேர்வுமையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மேலும் நிலையான தேர்வு கூட அலுவலர்களும் தேர்வறைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் ஆள்மாறாட்டம், முறைகேடுகளில் ஈடுபட்டதாக யாரும் பிடிபடவில்லை.

அனைத்து தேர்வு மையங்களின் நுழைவு வாசலிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தேர்வர்களை தவிர அன்னியர்கள் யாரையும் உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. தேர்வு நடைபெற்றதை வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வனும் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை கலெக்டர் அன்புசெல்வன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது 2 தேர்வர்கள் செல்போன் வைத்திருந்ததை கலெக்டர் அன்புசெல்வன் கண்டுபிடித்தார். இதையடுத்து செல்போன்களை அவர் பறிமுதல் செய்தார்.

விசாரணையில் கும்பகோணம் தபீன் கிழக்கு தெருவை சேர்ந்த வெங்கடேஷ், குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெரியகாட்டுசாகையை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. வெங்கடேசின் மாமியார் வீடு கடலூரில் இருப்பதால் அவர் இங்கு தேர்வு எழுத விண்ணப்பித்ததாக தெரிவித்தார். பின்னர் அவர்கள் இருவரும் தேர்வறையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இது குறித்து கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறுகையில், குரூப்-4 தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பும்போது அதில் தேர்வு நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்ற விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மின்னணு சாதனங்கள், செல்போன், புத்தகம் போன்ற பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி தேர்வு அறைக்குள் 2 பேர் செல்போன் வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Next Story