கண்மாயில் பிணமாக கிடந்தவர்: காரை ஏற்றி கொன்றது அம்பலம் - போலீசார் தீவிர விசாரணை


கண்மாயில் பிணமாக கிடந்தவர்: காரை ஏற்றி கொன்றது அம்பலம் - போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 3 Sep 2019 10:00 PM GMT (Updated: 3 Sep 2019 5:42 PM GMT)

சிவகங்கை அருகே காரை ஏற்றி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த கெமாளிபட்டி அருகே உள்ள காராம்போடை கண்மாய்கரை பகுதியில் நேற்று காலை ஒருவர் பிணமாக கிடந்ததை அந்த பகுதியில் சென்றவர்கள் பார்த்து சிவகங்கை தாலுகா போலீசிற்கு புகார் செய்தனர். அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தம்பிராஜ், சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் சீராளன் மற்றும் போலீசார் சம்ப இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

அதில் பிணமாக கிடந்தவர் 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும், அவரை யாரோ இங்கு கொலை செய்து போட்டு விட்டு சென்றுள்ளதும் தெரியவந்தது. மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பிரவுன் கலரில் பேண்டும், ஊதா கலரில் கோடு போட்ட சட்டையும் இடுப்பில் பெல்ட்டும் அணிந்து இருந்தார்.

மேலும் அவருடைய சட்டை பையில் வங்கியில் கடன் வாங்குபவர்கள் கொடுக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரம் எழுதப்பட்ட பேப்பர் இருந்தது. சம்பவ இடத்திற்கு போலீஸ் துப்பறியும் நாய் லைக்கா வரவழைக்கப்பட்டு, பிணம் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சற்று தொலைவில் இருந்த ஒரு மரத்தின் கீழ் சென்று நின்று விட்டது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் கொலை செய்யப்பட்டவரை ஏதோ ஒரு இடத்தில் வைத்து தாக்கி இங்கு கொண்டு வந்து போட்டு விட்டு அவர் மீது காரை ஏற்றி கொன்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் போலீசார், கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

Next Story