மாமல்லபுரம் மயானத்தில் மின் தகன மேடை அமைக்க கோரிக்கை


மாமல்லபுரம் மயானத்தில் மின் தகன மேடை அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 3 Sep 2019 11:00 PM GMT (Updated: 3 Sep 2019 6:38 PM GMT)

மாமல்லபுரம் மயானத்தில் மின் தகன மேடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் நகரம் சர்வதேச சுற்றுலா மையமாக உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தில் பாரமாக உள்ள முதியோர்களையும், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களையும் மனிதாபிமானம் இல்லாமல் இங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர்.

பிச்சை எடுத்து சாப்பிடும் அவர்கள் சில நாட்களில் இறந்து விடுகின்றனர். இவர்களை அடக்கம் செய்ய மாமல்லபுரம் போலீசார் திணறி வருகின்றனர். பிணத்தை எரியூட்டுபவர்கள் ஒரு பிணத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கேட்கின்றனர்.

இதனால் சில பிணங்களை எரிக்க முடியாமல் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி பிணவறை கூடத்தில் இந்த அனாதை பிணங்களை அனுப்பி விடுகின்றனர். மேலும் மாமல்லபுரத்தில் நடுத்தர ஏழை குடும்பத்தை சேர்ந்த யாராவது உடல் நலம் குன்றி இறந்தால் மாமல்லபுரம் மயானத்தில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வசூலிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆனால் மின்தகன மேடை அமைத்தால் ஒரு பிணத்திற்கு ரூ.1000 மட்டுமே பேரூராட்சி கட்டணம் வசூலிக்கப்படும். காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்தகன மேடை கொண்டு வந்து பிணம் எரியூட்டப்பட்டு இந்த தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிட்லபாக்கம், நாவலூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் மின்தகனமேடை கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் அனாதை மற்றும் ஏழை குடும்பத்தில் இறப்பவர்களின் பிணங்களை எரிக்க மின் தகன மேடை கொண்டு வரவேண்டும். மாமல்லபுரம் மயானம் முள்புதர்கள் சூழ்ந்து சமூக விரோதிகளின் மது குடிக்கும் பாராகவும், சூதாட்ட இடமாகவும் மாறி உள்ளது. எனவே மாமல்லபுரம் மயானத்தில் மின் தகன மேடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story