பிரதமர் மோடி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் - பா.ஜனதா கூட்டத்தில் தீர்மானம்


பிரதமர் மோடி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் - பா.ஜனதா கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 3 Sep 2019 10:57 PM GMT (Updated: 3 Sep 2019 10:57 PM GMT)

குமரி மாவட்டத்தில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி, கோட்ட அமைப்பாளர்கள் தர்மராஜ், வேல்பாண்டியன், தர்மபுரம் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும், பிரதமர் மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் அவர் ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தேவ், முத்துராமன், தர்மலிங்க உடையார், தங்கப்பன், சஜூ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், வருகிற 17-ந் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் அவருடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பதோடு, அந்த வெற்றி விழாவை சிறப்பாக கொண்டாடுவது, குமரி மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story