குடும்ப பிரச்சினையில் வீட்டை விட்டு வெளியேறிய மூதாட்டி, ஆற்றங்கரையில் பிணமாக கிடந்தார்


குடும்ப பிரச்சினையில் வீட்டை விட்டு வெளியேறிய மூதாட்டி, ஆற்றங்கரையில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 6 Sep 2019 10:00 PM GMT (Updated: 6 Sep 2019 1:37 PM GMT)

குடும்ப பிரச்சினையில் வீட்டை விட்டு வெளியேறிய மூதாட்டி, நாகூர் அருகே ஆற்றங்கரையில் பிணமாக கிடந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகூர்,

நாகை மாவட்டம் நாகூர் அருகே பனகுடியில் உள்ள காரைமேடு பிரவடையான் ஆற்றின் கரையோரத்தில் 62 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் உமா, நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மூதாட்டி காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் வடகட்டளை தெருவை சேர்ந்த கண்ணையன் மனைவி மேனி அம்மாள் (வயது 62) என்பதும், இவரது மூத்த மகன் வெங்கடேசன் மனைவிக்கும், மேனி அம்மாளுக்கும் கடந்த 3 நாட்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனால் மனமுடைந்த மேனி அம்மாள் யாரிடமும் சொல்லாமல் வீட்டை வீட்டு வெளியே வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து மேனி அம்மாள் உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து வீட்டில் இருந்து வெளியேறிய மேனிஅம்மாள் ஆற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story