தோட்டக்கலை துறை மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


தோட்டக்கலை துறை மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 6 Sep 2019 10:30 PM GMT (Updated: 6 Sep 2019 8:44 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல், 

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குவதில் முக்கிய பங்கி வகிக்கிறது. இத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களான நுண்ணீர் பாசனம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டம் போன்ற திட்டங்களில் நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவுதல், நிழல் வலை குடில்கள் அமைத்தல், பசுமை குடில் அமைத்தல் போன்ற தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

மேலும் இத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தோட்டக்கலை பண்ணைகள் மற்றும் பூங்காக்களிலும் தோட்டங்கள் வடிவமைத்தல், புல்தரை அமைத்தல் போன்ற பணிகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் வணிக ரீதியாக தொழில் மேற்கொள்வதற்கு முறையான பயிற்சி அவசியமாகிறது.

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, தோட்டக்கலை துறை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து கிராமப்புற இளைஞர்களுக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மாவட்டம் தோறும் வழங்கி வருகிறது. குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்ட விருப்பம் உள்ள இளைஞர்கள், தாங்கள் விரும்பும் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

Next Story