விவசாயி பெயரில் ரூ.23 லட்சம் கடன் வாங்கி மோசடி, தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகி உள்பட 9 பேர் மீது வழக்கு


விவசாயி பெயரில் ரூ.23 லட்சம் கடன் வாங்கி மோசடி, தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகி உள்பட 9 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Sep 2019 10:30 PM GMT (Updated: 6 Sep 2019 8:58 PM GMT)

விவசாயி பெயரில் ரூ.23 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகி உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தை அடுத்த அரசலாற்றுப்படுகையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். விவசாயி. இவர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கபிஸ்தலம் கிராமத்தில் 1 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்து திருமண்டங்குடியில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பி வந்தேன். 12-7-2018 அன்று எனக்கு வக்கீல் நோட்டீசு வந்தது. அதில், கும்பகோணத்தில் இயங்கி வரும் ஒரு வங்கியில் இருந்து ரூ.23 லட்சம் நான் கடன் பெற்று இருப்பதாகவும், 31-5-2018 வரை வட்டியும், அசலும் சேர்த்து ரூ.28 லட்சத்து 44 ஆயிரத்து 607 செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் நோட்டீஸ் வந்த பிறகு யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் நான் வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்தேன்.

இந்த நிலையில் அதே வக்கீலிடம் இருந்து 2-வது நோட்டீசு 27-4-2019 அன்று வந்தது. அதில் அசலும், வட்டியும் சேர்த்து ரூ.34 லட்சத்து 70 ஆயிரம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து வங்கியில் விவரம் கேட்டபோது நீங்களும், மற்றும் 213 விவசாயிகளும் எங்கள் வங்கியில் கடன் பெற்று இருக்கிறீர்கள் என்று பட்டியலை கொடுத்தனர். என் பெயரிலும், விவசாயிகள் பெயரிலும் கோடிக்கணக்கான ரூபாயை ஆலை நிர்வாகம் கடனாக பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார்கள். இது தொடர்பாக தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.நானும் மற்ற விவசாயிகளும் ஆலைக்கு கரும்பு பதிவு செய்து வெட்டி அனுப்பினோம். இது தொடர்பாக ஆலை நிர்வாகம் விவசாயிகளிடம் சட்டப்படி தனித்தனியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் ஆலை நிர்வாகம் மத்திய அரசு அறிவிக்கும் கரும்பு விலையையும் தராமல் ஏமாற்றி வருகிறார்கள். எனவே சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கரும்பு பணத்தை பெற்றுத்தர வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறி இருந்தார்.

இந்த புகாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர், பொது மேலாளர், கணக்குபிரிவு மேலாளர், முதன்மை மேலாளர், வங்கி மேலாளர், வங்கி கள அதிகாரி, துணை மேலாளர் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story