திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Sep 2019 11:15 PM GMT (Updated: 7 Sep 2019 9:16 PM GMT)

கோயம்பேட்டில் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

கோயம்பேடு சின்மயா நகர் குலசேகரபுரம், வேதா சாலையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 60). இவரது மகள் பிரியங்கா (29), பட்டப்படிப்பு முடித்தவர். நேற்று முன்தினம் இரவு அறைக்குள் சென்ற பிரியங்கா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது பிரியங்கா தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்துபோன பிரியங்காவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பிரியங்காவிற்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளையை பார்த்து உள்ளனர். இந்த நிலையில் 9-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்தில் பிரியங்காவிற்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்துவந்த பிரியங்கா அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story