திருவொற்றியூரில் கடலில் மூழ்கி மாயமான 2 மாணவர்கள் பிணமாக மீட்பு


திருவொற்றியூரில் கடலில் மூழ்கி மாயமான 2 மாணவர்கள் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 8 Sep 2019 10:30 PM GMT (Updated: 8 Sep 2019 6:53 PM GMT)

திருவொற்றியூர் கடலில் மூழ்கி மாயமான 3 மாணவர்களில் 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மாயமான மற்றொரு மாணவனை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூரை அடுத்த மணலி பல்ஜிபாளையம் பகுதியை சேர்ந்த ராகேஷ் (வயது 15) என்பவர் மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ராகேஷின் பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் இவரது வீட்டிற்கு வந்த சக மாணவர்களான மணலி மாத்தூரை சேர்ந்த தனுஷ் (15), சின்ன சேக்காட்டை சேர்ந்த ஜெயபாரதி(15), தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த கோகுல்நாத்(15), பெரிய தோப்பை சேர்ந்த சுனில் குமார் (15) உள்பட 8 பேர் திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் பகுதியில் கடற்கரை கரைக்கு சென்றனர். அப்போது தனுஷ், ஜெயபாரதி, கோகுல்நாத், சுனில்குமார் ஆகிய 4 பேரும் கடலில் இறங்கி குளித்தனர்.

அப்போது கடலில் எழுந்து வந்த ராட்சத அலை மாணவர்கள் 4 பேரையும் கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக அங்கு ஓடிவந்து கடலுக்குள் குதித்து மாயமான மாணவர்களை தேடினார்கள்.

சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு தனுஷ் உடல் கரை ஒதுங்கியது. ஆனால் மற்ற 3 பேரின் உடலை மீனவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை சம்பவம் நடந்த இடத்திற்கு சற்று தொலைவில் மீனவர்கள் மீன்பிடித்த போது அவர்களது வலையில் மாணவர் சுனில் குமார் உடல் சிக்கியது. அவரது உடலை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் மாணவர் ஜெயபாரதியின் உடல் கடலரிப்பை தடுக்க போடப்பட்டுள்ள ராட்சத கற்களுக்குள் சிக்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிணமாக மீட்கப்பட்ட 3 மாணவர்களின் உடல்களையும் திருவொற்றியூர் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட கோகுல்நாத்தை தேடி வருகின்றனர்.

Next Story