அரக்கோணம் அருகே, கை, கால்களை கட்டி வாலிபர் கொலை - ஏரியில் பிணத்தை புதைத்து விட்டு ஓடியவர்களுக்கு வலைவீச்சு


அரக்கோணம் அருகே, கை, கால்களை கட்டி வாலிபர் கொலை - ஏரியில் பிணத்தை புதைத்து விட்டு ஓடியவர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Sep 2019 10:30 PM GMT (Updated: 8 Sep 2019 8:28 PM GMT)

அரக்கோணம் அருகே கை, கால்களை கட்டி வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை ஏரியில் புதைத்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரக்கோணம், 

அரக்கோணம் அருகே அன்வர்திகான்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சப்பர்பாய். இவரது மகன் ஜெய்லாவூதீன் (வயது 34). இவர் அதே பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி அமிதா (30) என்ற மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

ஜெய்லாவுதீன் தினமும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்து விடுவார். கடந்த 6-ந் தேதி வேலைக்கு சென்றவர் பின்னர் வீட்டிற்கு வரவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் மனைவி மற்றும் குடும்பத்தினர் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து ஜெய்லாவூதின் உறவினர்கள் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அன்வர்திகான்பேட்டை அருகே கீழ்ஆவதம் கிராமத்தில் உள்ள ஏரியில் குடிமராமத்து பணிகள் நடந்து வந்தது.

நேற்று, ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரி கொண்டிருந்தனர். அப்போது ஒரு பள்ளத்தில் மண் அள்ளிய போது பொக்லைன் எந்திரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் சிக்கியது. அதிர்ச்சியடைந்த டிரைவர் உடலை எடுத்து வெளியே போட்டார்.

இந்த தகவல் காட்டுத்தீ போல் கிராமத்தில் பரவியது. கிராம மக்கள் ஏரிக்கு சென்று இறந்து கிடக்கும் நபர் யார் என்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தவர் ஜெய்லாவூதீன் என்பது தெரிந்தது. அவர் அணிந்திருந்த லுங்கியை எடுத்து அவரின் கை, கால்களை கட்டி முகத்தை சிதைத்து மர்ம நபர்கள் கொலை செய்து ஏரியில் புதைத்து உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கே.மனோகரன், தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்லாவூதீனை கொலை செய்து ஏரியில் உடலை புதைத்து சென்ற நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அன்வர்திகான்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story