ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை: கொலையாளிகளை கைது செய்ய கோரி மறியல்; பஸ், கடைகள் தாக்கப்பட்டதால் பரபரப்பு


ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை: கொலையாளிகளை கைது செய்ய கோரி மறியல்; பஸ், கடைகள் தாக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Sep 2019 11:15 PM GMT (Updated: 8 Sep 2019 9:42 PM GMT)

வாலிபர் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளை கைது செய்ய கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது கடைகள் மற்றும் பஸ்மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தை சேர்ந்தவர் காளையப்பன் மகன் ராஜசேகரன் (வயது 38). இவர் மீது கடந்த 2013-ம்ஆண்டு சிவகங்கையை அடுத்த பனங்காடி அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு, 2015-ம் வருடம் ஜூலை மாதம் காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை அருகே பஸ்சில் தாய், மகனை வெட்டி கொலை செய்த வழக்கு மற்றும் காளையார்கோவில் அருகே ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவரை கொலை செய்ய முயன்ற வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்தநிலையில் சாக் கோட்டை அருகே பஸ்சில் தாய், மகன் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு விசாரணைக்காக ராஜசேகரன் கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் அவரும் நாட்டரசன்கோட்டையை சேர்ந்த மற்றொரு ராஜசேகரன் என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர்.

அவர்கள் 2 பேரும் சிவங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சற்று தொலைவில் திருப்பத்தூர் ரோட்டில் வந்த போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது. இதை பார்த்ததும் ரோட்டில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு 2 பேரும் வெவ்வேறு திசைகளில் தப்பி ஓடினர். அதில் பனங்காடி ராஜசேகர் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் ஓடினார். அவரை அந்த கும்பல் ஓட, ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டிக் கொன்றது.

இதுகுறித்து கொலை செய்யப்பட்ட ராஜசேகரனின் மனைவி கல்பனா என்ற திவ்யா கொடுத்த புகாரின் பேரில் சரவணன், கண்மணி, கோவானுர் முத்து மற்றும் விக்கி, அருள், பரமசிவம் உள்பட 11 பேர் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட ராஜசேகரின் உறவினர்கள் நேற்று சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து, கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரி மானாமதுரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அந்த பகுதியில் இருந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கிருந்த கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த வழியாக வந்த பஸ் மீது கல்வீசி தாக்கியதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அப்துல்கபூர், மோகன்தம்பி ராஜ், நகர் இன்ஸ்பெக்டர் மோகன், தாசில்தார் கண்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி சமரசம் செய்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டதுடன், சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story