பெங்களூருவில் நகர்வலம் மெட்ரோ ரெயில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவு


பெங்களூருவில் நகர்வலம் மெட்ரோ ரெயில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவு
x
தினத்தந்தி 8 Sep 2019 10:50 PM GMT (Updated: 8 Sep 2019 10:50 PM GMT)

பெங்களூருவில் நகர்வலம் மேற்கொண்ட முதல்-மந்திரி எடியூரப்பா, மெட்ரோ ரெயில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூருவில் நகர்வலம் மேற்கொண்டார். அவருடன் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் இருந்தனர். முதலில் கே.ஆர்.புரத்தில் உள்ள குந்தலஹள்ளி கேட் அருகே நடைபெற்று வரும் சுரங்க பாதை பணிகளை எடியூரப்பா ஆய்வு செய்தார். அந்த சுரங்க பாதையின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு கடும் கோபம் அடைந்த எடியூரப்பா, என்ன காரணத்திற்காக அந்த பணிகளை நிறுத்தி வைத்துள்ளர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அந்த பணியின் ஒப்பந்ததாரர், நிலத்தை கையகப்படுத்துவதில் பிரச்சினை உள்ளதால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த மந்திரி ஆர்.அசோக் மற்றும் அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ., “அது காரணம் அல்ல, நீங்கள் துணை குத்தகைக்கு பணியை கொடுத்துள்ளர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம். அதனால் இந்த பணி நடைபெறவில்லை. யாரை கேட்டு துணை குத்தகைக்கு பணியை வழங்கி இருக்கிறீர்கள்“ என்று கேள்வி எழுப்பினர்.

இதனால் ஆக்ரோஷம் அடைந்த எடியூரப்பா, “அரசின் கவனத்திற்கு கொண்டுவராமல் யாரை கேட்டு துணை குத்தகைக்கு பணியை கொடுத்துள்ளர்கள். உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார். இன்னும் 6 மாதத்தில் பணிகளை முடிக்காவிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று எச்சரிக்கை விடுத்தார்.

அதன்பிறகு அந்த பகுதி மக்கள் எடியூரப்பாவிடம் சுற்றுவட்ட சாலையை அமைத்து கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த எடியூரப்பா, அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள், இந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அதற்கு தீர்வு காணுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்த எடியூரப்பா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்கள் நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை ஏற்றுக்கொண்ட அந்த நிறுவனத்தினர், உரிய உதவியை செய்வதாக கூறினர். அதே போல் பன்னரகட்டா ரோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று எடியூரப்பா ஆய்வு நடத்தினார். நகர்வலம் முடிந்த பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் இன்று (அதாவது நேற்று) பல்வேறு பகுதிகளுக்கு சென்று, வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தேன். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். பொம்மசந்திரா-ஆர்.வி.ரோடு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்து 2021-ம் ஆண்டுக்குள் மெட்ரோ சேவை தொடங்கப்படும்.

பணிகளை விரைவுபடுத்தி முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் புதிய சாலை அமைத்து பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளேன். ஒயிட்பீல்டு பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ பாதை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தேன். அங்கு உண்டாகும் வாகன நெரிசல் குறித்தும் ஆலோசனை நடத்தினேன்.

ஒயிட்பீல்டு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளையும் வருகிற 2021-ம் ஆண்டுக்குள் முடிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். மொத்தத்தில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை விரைவுபடுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஹெப்பால் மேம்பாலத்தில் 5 பாதைகளை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். சில்க்போர்டில் இருந்து ஹெப்பால் வரைக்கும் வெளிவட்டச்சாலை அமைப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த 2 மாதங்களில் டெண்டர்கள் விடுக்கும் பணிகளை முடிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.

ரூ.200 கோடி செலவில் பெல்லந்தூர் ஏரியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவை உலக தரத்தில் மேம்படுத்த வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள். பெங்களூருவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நிதி பற்றாக்குறை இல்லை. வளர்ச்சி பணிகள் பெயரில் ஊழல் தாண்டவமாடுகிறது. இந்த ஊழலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசு விரைவில் நிதி உதவியை வழங்கும். நகரில் குப்பை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். மற்ற மாநிலங்களில் குப்பைகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதை நாங்கள் நேரில் ஆய்வு செய்வோம். குமாரசாமி என்னை விமர்சித்துள்ளார். அதற்கு நான் பதிலளிக்க மாட்டேன்.

ராஜகால்வாய்களை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்களை இடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும் எந்த தயவு தாட்சண்யமும் இன்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இந்த நகர்வலத்தின்போது, துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் ஆகியோர் அருகருகே இருந்தாலும், இருவரும் பேசிக்கொள்ளவில்லை. துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காததால், ஆர்.அசோக் கடும் அதிருப்தியில் உள்ளார். இதனால் தன்னை விட இளையவரான அஸ்வத் நாராயணுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கியதை ஆர்.அசோக்கால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், மந்திரி ஆர்.அசோக்குடன் அஸ்வத் நாராயண் கைகோர்த்தபடி எடியூரப்பாவுடன் நடந்து வந்தார்.

Next Story