’விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்‘- மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் விவசாயிகள் மனு


’விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்‘- மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 9 Sep 2019 11:00 PM GMT (Updated: 9 Sep 2019 8:28 PM GMT)

விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் பி.விஜயகுமார் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், இளைஞர் அணி செயலாளர் யுவராஜா, கராத்தே சக்திவேல் மற்றும் கட்சியினர் மாவட்ட கலெக்டர் சி.கதிரவனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

கீழ்பவானி, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அங்கு நெல் சாகுபடி செய்வதற்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் ஆட்கள் பற்றாக் குறை காரணமாக நடவு பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி மூலமாக நடக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிக்கு மக்கள் சென்று விடுகிறார்கள். எனவே அந்த பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து நெல் பயிர் நடவு பணிக்கு அனுப்பி வைத்து விவசாயம் செழிக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து பெங்களூரு தேவனகொந்தி வரை கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் புதிதாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்த திட்டத்துக்காக ஈரோடு மாவட்டத்தில் எக்கட்டாம்பாளையம், பசுவப்பட்டி, குப்புச்சிபாளையம், முருங்கத்தொழுவு, அட்டவணை அனுமன்பள்ளி, அவல்பூந்துறை, துய்யம்பூந்துறை, எழுமாத்தூர், மொடக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு மாற்றாக சாலையோரங்கள் அல்லது மாற்று வழியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

சிறுவலூர் அருகே குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சண்முகம் (வயது 70) என்பவர் கொடுத்த மனுவில், “எனது மகன் நாகராஜ் நம்பியூர் வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவருடன் ரிக் வண்டியில் கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்துக்கு வேலைக்கு சென்றார். கடந்த பிப்ரவரி மாதம் எனக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நாகராஜ், எனது முதலாளி கடந்த 6 மாதங்களாக சம்பளம் கொடுக்காததால் நான் ஊருக்கு வரமுடியவில்லை என்று கூறினார். அதன்பிறகு வேலைக்கு அழைத்து சென்றவர் ஊர் திரும்பினார். ஆனால் எனது மகன் வரவில்லை. இதுதொடர்பாக அவரிடம் கேட்டால் அலட்சியமாக பதில் கூறுகிறார். மேலும், நாகராஜை காணவில்லை என்று தேடி வருவதாகவும் என்னிடம் கூறினார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே எனது மகனை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்”, என்று கூறிஇருந்தார்.

வெள்ளோடு சென்னிமலை ரோடு சுப்பிரமணியன் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கொடுத்த மனுவில், “எனது குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னிமலையை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.70 ஆயிரத்தை கடனாக வாங்கி இருந்தேன். அதன்பிறகு 3 தவணைகளில் ரூ.45 ஆயிரத்தை வாங்கினேன். அவர் அதிகமான கந்துவட்டி வசூலித்ததால் என்னால் தொடர்ந்து கட்ட முடியவில்லை. தற்போது அசல், வட்டி சேர்ந்து மொத்தம் ரூ.15 லட்சம் கட்ட வேண்டும் என்று கேட்டு மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தார். நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த மனுவில், “வடமுகம் வெள்ளோடு சின்னக்குளம் ஏரியில் அரசு அனுமதி அளித்த நாட்களையும் கடந்து மண் அள்ளப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஏரியில் மண் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தனர்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 357 மனுக்களை கொடுத்தனர். கூட்டத்தில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் நடந்த கருத்து சித்திர போட்டியில் வெற்றி பெற்ற 11 பேருக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி இளங்கோ உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



Next Story