விளாத்திகுளம் அருகே, மரக்கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.1 கோடி பொருட்கள் சேதம்


விளாத்திகுளம் அருகே, மரக்கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.1 கோடி பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 9 Sep 2019 11:00 PM GMT (Updated: 9 Sep 2019 11:05 PM GMT)

விளாத்திகுளம் அருகே மரக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

விளாத்திகுளம்,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூரைச் சேர்ந்தவர் முத்தையா. இவர் புதூர்-விளாத்திகுளம் மெயின் ரோட்டில் மரக்கடை நடத்தி வருகிறார். மேலும் அங்கு இரும்பு கம்பிகள், ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரைகள், சிமெண்டு, பெயிண்டு, தள ஓடுகள் போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் விடுமுறை தினத்தை முன்னிட்டு, முத்தையா தன்னுடைய குடும்பத்தினருடன் வெளியூரில் நடந்த உறவினரின் திருமண விழாவுக்கு சென்றார். இந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் முத்தையாவின் மரக்கடையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால், கடை முழுவதும் தீ மளமளவென்று பரவியது.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து முத்தையாவுக்கும், விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வாகனத்தில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். மரக்கடையில் இருந்த பெயிண்டு டப்பாக்களிலும் தீப்பிடித்ததால், பல அடி உயரம் வரையிலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதையடுத்து கோவில்பட்டி, தூத்துக்குடி சிப்காட், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்பகுதி மக்கள் டேங்கர் லாரிகள் மூலம் தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சுமார் 4½ மணி நேரம் போராடி, இரவு 1 மணியளவில் தீயை முற்றிலும் அணைத்தனர். இதனால் அருகில் உள்ள மற்றொரு மரக்கடை, பட்டாசு கடை, வங்கி, ஏ.டி.எம். மையம் மற்றும் வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.இந்த பயங்கர தீ விபத்தில் மரக்கடையில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான தேக்கு, கோங்கு, வேங்கை, வேம்பு போன்ற விலை உயர்ந்த மரக்கட்டைகள், கதவுகள், ஜன்னல்கள், பெயிண்டு போன்றவை தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரைகள், சிமெண்டு, தள ஓடுகள் போன்றவையும் சேதம் அடைந்தன.

தீ விபத்தில் சேதம் அடைந்த மரக்கடையை கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மின்கசிவு காரணமாக, மரக்கடையில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story