இலவச அரிசி கொள்முதலில் முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கவர்னர் கிரண்பெடியிடம் - பாரதீய ஜனதா வலியுறுத்தல்


இலவச அரிசி கொள்முதலில் முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கவர்னர் கிரண்பெடியிடம் - பாரதீய ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Sep 2019 12:55 AM GMT (Updated: 10 Sep 2019 12:55 AM GMT)

இலவச அரிசி கொள்முதலில் முறைகேடு நடப்பதாகவும் இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் புகார் தெரிவித்தனர்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடியை பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார்கள். அவர்களுடன் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் தங்க.விக்ரமன், துணைத்தலைவர்கள் ஏம்பலம் செல்வம், முதலியார்பேட்டை செல்வம் மற்றும் நிர்வாகிகள் முருகன், நாகராஜன், ஜெயந்தி, அசோக்பாபு, சோமசுந்தரம் ஆகியோரும் சென்று இருந்தனர். அப்போது ரேஷன் அரிசி கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி புகார் மனுவை கவர்னரிடம் அவர்கள் கொடுத்தனர்.

கவர்னரை சந்தித்துவிட்டு வெளியே வந்த மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் ஆளும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு தொடர்ந்து மக்கள் மத்தியில் தவறான கருத்துகளை பதிவு செய்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு தரமற்ற இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் 80 சதவீத மக்களைத்தான் சென்றடைகிறது.

இலவச அரிசிக்காக ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 17 மாதங்களாக மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படவில்லை. அதற்குரிய பணத்தை மக்களுக்கு தராமல் வேறு துறைகளுக்கு செலவிட்டுள்ளனர். அப்படி பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரிசிக்குரிய பணமாக ரூ.9 ஆயிரம் வீதம் தரவேண்டியதிருக்கும். மக்களிடம் பணத்தை நேரடியாக கொண்டு சேர்ப்பதுதான் மத்திய அரசின் திட்டம். புதுவை அரசும் 3 மாதம் பணம் கொடுத்துள்ளது. அரிசிக்கு பதிலாக வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துவதை மக்கள் எதிர்க்கவில்லை.

இலவச அரிசி கொள் முதலில் கிலோவுக்கு ரூ.2 பேரம் நடக்கிறது. விஞ்ஞான ரீதியில் ஊழல் நடக்கிறது. அரிசியும் நமது மாநில வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யப்படுவதில்லை. ஆந்திரா, கர்நாடக மாநில வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. அரிசி கொள்முதலுக்கு இ-டெண்டர் முறையும் பின்பற்றப்படுவதில்லை.

அரிசி கொள்முதல் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசின் பல திட்டங்களில் மக்களுக்கு வங்கிக் கணக்கில்தான் பணம் செலுத்தப்படுகிறது.

புதுவை மாநிலத்தில் உள்ள 1.76 லட்சம் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் பணம் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. தற்போதைய அரிசி பிரச்சினை தொடர்பாக மத்திய உள்துறை மந்திரியிடம் பேச உள்ளோம். மேலும் ஊழலை மக்கள் மத்தியில் வெளிக்கொண்டுவர போராட்டங்களும் நடத்த உள்ளோம். இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story