கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிப்பு


கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் உலக தற்கொலை  தடுப்பு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 10 Sep 2019 10:45 PM GMT (Updated: 10 Sep 2019 4:44 PM GMT)

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் நேற்று உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

சென்னை,

உலகம் முழுவதும் கடந்த 2003-ம் ஆண்டு முதல் உலக தற்கொலை தடுப்பு தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 10-ந்தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை காப்பகத்தில் உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கு தற்கொலையை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை காப்பக இயக் குனர் டாக்டர் பூர்ணசந்திரிகா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை செவிலியர்கள், சென்னை மருத்துவ கல்லூரி செவிலியர் மாணவர்கள் நாடகம் நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அனைவரும் தற்கொலையை தடுப்போம் என உறுதிமொழி எடுத்தனர். அதன் பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அங்குள்ள சுவரில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் டாக்டர் பூர்ணசந்திரிகா நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகில் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒரு தற்கொலை நடப்பதாகவும், ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலையால் இறக்கின்றனர். ஒருவர் தற்கொலை செய்துகொள்வதால், அவரைச் சார்ந்த 135 பேர் பாதிப்படைகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை உணர்த்தவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பெறுகின்றன.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ளவர்கள் வீட்டில், போன், பைக் உள்ளிட்டவைகள் வாங்கித் தரவில்லை எனக்கூறி தற்கொலைக்கு முயல்கின்றனர். குடும்பப் பிரச்சினைகள், கடன்தொல்லை போன்றவற்றால் பெற்றோர் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறுவதைக் கேட்கும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் அந்த எண்ணமே தோன்றுகிறது. மனநலக் காப்பகங்களில் வாரம் முழுவதும் 24 மணிநேரமும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

தற்கொலையில் ஈடுபடுபவர்களை அவர்களது நடவடிக்கைகளைக் கொண்டு எளிதில் அடையாளம் காண முடியும். சண்டை, தற்கொலை முயற்சி உள்ளிட்ட வன்முறை வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தல் கூடாது. அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களை பகிர்ந்து பிரபலப்படுத்தாமல், அவற்றை நீக்க வழிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story