‘மாணவர்கள் முகநூலில் மூழ்கி இருக்கக்கூடாது’ - கூடுதல் தொழிலாளர் நீதிபதி பேச்சு


‘மாணவர்கள் முகநூலில் மூழ்கி இருக்கக்கூடாது’ - கூடுதல் தொழிலாளர் நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 10 Sep 2019 10:45 PM GMT (Updated: 10 Sep 2019 7:59 PM GMT)

மாணவர்கள் முகநூலில் மூழ்கி இருக்கக்கூடாது என்று சட்ட விழிப்புணர்வு முகாமில் கூடுதல் தொழிலாளர் நீதிபதி மணிவண்ணன் பேசினார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வேலுர் ஊரீசு கல்லூரியில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. உதவி பேராசிரியை லோட்டஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) நெல்சன்விமலநாதன், பேராசிரியர் எடிசன்நேசதாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சட்டங்கள் குறித்து கூடுதல் சார்பு நீதிபதி ஆனந்தன், வக்கீல் திருநாவுக்கரசு ஆகியோர் பேசினர்.

கூடுதல் தொழிலாளர் நீதிபதி என்.மணிவண்ணன் தலைமை தாங்கி பேசியதாவது:-

சட்டம் குறித்து நாம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். சமூகத்தில் நாம் கடைபிடிக்கப்படும் நல்ல பழக்கவழக்கங்கள் தான் பின்நாளில் சட்டமாக மாறியது. கடமையை மீறுவது வீதிமீறலாகும். வளர்ந்து வரும் மாணவர்கள் சமூகவலைதளங்களில் மூழ்கி இருக்கிறார்கள். அவற்றில் இருந்து வெளியே வரவேண்டும்.

சமூக வலைதளங்களை நன்மைக்காக பயன்படுத்த வேண்டும். முகநூலில்(பேஸ்புக்) ஆயிரம் நண்பர்களை வைத்துள்ளார்கள். ஆனால் அருகில் உள்ளவர்களிடம் பேசுவதை தவிர்க்கிறார்கள். மாணவர்கள் முகநூலில் மூழ்கி இருக்காமல் வெளியே வாருங்கள். இச்சமூகம் மாணவர்களை நம்பித்தான் உள்ளது. நமது லட்சியம் இச்சமூகத்தை முன்னேற்றுவதாகும். மாணவர்கள் சட்டம், சமூகம் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து மாணவர்களின் கேள்விகளுக்கு சட்ட நிபுணர்வுகள் விளக்கம் அளித்தனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்ட தன்னார்வலர் மகேந்திரன் செய்திருந்தார். முடிவில் முதுநிலை நிர்வாக உதவியாளர் சத்தீஷ்ராஜ் நன்றி கூறினார்.


Next Story