சிக்கராயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம்பெண் பலி - வாலிபர் படுகாயம்


சிக்கராயபுரம் அருகே  மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம்பெண் பலி - வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 10 Sep 2019 10:45 PM GMT (Updated: 10 Sep 2019 8:14 PM GMT)

சிக்கராயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம்பெண் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த சிக்கராயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம்பெண் இறந்து கிடப்பதாகவும், வாலிபர் காயங்களுடன் இருப்பதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயங்களுடன் இருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காயம் அடைந்தவர் பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த அண்ணாமலை (வயது 21) என்பதும் பட்டப்படிப்பு முடித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

இறந்து போன பெண் குன்றத்தூரை அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்த அபிநயா (20), என்பதும் காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் ஷோரூமில் கடந்த சில வாரங்களாக வேலை செய்து வந்தார் என்பதும் தெரியவந்தது. அங்கு செல்லும்போது அபிநயாவுடன் அண்ணாமலைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது அபிநயா அந்த வேலையில் இருந்து நின்று விட்டதால் இதுவரை வேலை செய்ததற்கான சம்பள பணத்தை வாங்கி வருவதாக வீட்டில் கூறிவிட்டு நேற்று சென்றுள்ளார்.

குன்றத்தூரில் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த அண்ணாமலை, அபிநயாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அபிநயாவுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி கொடுப்பதாக கூறி அவரை மோட்டார் சைக்கிளை ஓட்ட வைத்து விட்டு பின்னால் அண்ணாமலை அமர்ந்து இருந்துள்ளார்.

திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையின் தடுப்புச்சுவரில் உள்ள கம்பியின் மீது மோதியதில் அபிநயா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அண்ணாமலை படுகாயம் அடைந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story