கோட்டக்குப்பத்தில், வீடு புகுந்து ரூ.3 லட்சம் நகை- பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கோட்டக்குப்பத்தில், வீடு புகுந்து ரூ.3 லட்சம் நகை- பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Sep 2019 10:30 PM GMT (Updated: 11 Sep 2019 5:28 PM GMT)

கோட்டக்குப்பத்தில் வீடு புகுந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

கோட்டக்குப்பம் பர்கத் நகரில் வசித்து வருபவர் அகமது மகன் ஆசிப்அகமது (வயது 32). இவர் புதுச்சேரி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ரத்ததான பரிசோதனை நிலையத்தில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி முசிதா பர்வீன் (28) நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். சம்பவத்தன்று முசிதாபர்வீனுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை அழைத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினர் அனைவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிப்அகமது தனது வீட்டிற்கு வந்தார். அப்போது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.

நள்ளிரவில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story