கோவில் நகை திருட்டு: பூசாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் - ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு


கோவில் நகை திருட்டு: பூசாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் - ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Sep 2019 10:30 PM GMT (Updated: 11 Sep 2019 5:28 PM GMT)

ஸ்ரீமுஷ்ணத்தில் கோவில் நகை திருடப்பட்ட சம்பவத்தில் பூசாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் திருப்பாணாழ்வார் தெருவில் ஸ்ரீமத் பாளையத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அதேதெருவை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் கலியமூர்த்தி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அம்மனுக்கு 3 பவுன் நகைகளும், வெள்ளி காப்புகளும் இருந்தன. இந்த நகையை கடந்த மாதம் முதல் காணவில்லை. மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர்.

இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் மனைவி ஜெயமாலினி என்பவர் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் அளித்தார். அதில் அம்மன் நகையை பூசாரி கலியமூர்த்தி தான் திருடி விட்டார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுத்து நகையை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனு மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்குள்ள சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகும் நிலையில், கலியமூர்த்தியிடம் விசாரணை நடத்தி, நகையை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மீண்டும் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வைத்தியநாதன், வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story