செங்கல்பட்டு அருகே புதையல் இருப்பதாக கருதி சிதைக்கப்படும் முதுமக்கள் தாழிகள் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய கோரிக்கை


செங்கல்பட்டு அருகே புதையல் இருப்பதாக கருதி சிதைக்கப்படும் முதுமக்கள் தாழிகள் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 11 Sep 2019 10:30 PM GMT (Updated: 11 Sep 2019 6:22 PM GMT)

செங்கல்பட்டு அருகே முதுமக்கள் தாழிகளுக்கு அடியில் புதையல் இருப்பதாக கூறி சில சமூக விரோதிகளால் சிதைக்கப்படுகின்றன.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு அருகே முதுமக்கள் தாழிகளுக்கு அடியில் புதையல் இருப்பதாக கூறி சில சமூக விரோதிகளால் சிதைக்கப்படுகின்றன. இங்கு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதுமக்கள் தாழி

செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்றங்கரையில் பழங்காலத்தில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு சாஸ்திரம்பாக்கம், பழவேரி, திருமுக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள் சான்றுகளாக உள்ளன. முதுமக்கள் தாழிகள் என்பது ஒருவர் இறந்தபோது பூமிக்கடியில் பெரிய பானையில் உடலை வைத்து அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் வைத்து கற்களால் மூடிவிடுவர். அதன் பிறகு அதனை சுற்றிலும் பெரிய காற்களால் சுவர்களை அமைத்துவிடுவார்கள்.

இதற்கு கற்படை வட்டம், கற்பதுகை என பெயர்களை குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளும், கற்படை வட்டங்களும், கற்பதுகைகளும் சாஸ்திரம்பாக்கம், பழவேரி, திருமுக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகின்றன.

புதையல் வதந்தி

பாலாற்று நாகரிகத்தில் வாழ்ந்த மக்களுக்கான இடுகாடாக இப்பகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது முதுமக்கள் தாழிகள் உள்ள பகுதிகளில் புதையல்கள் இருப்பதாக வதந்திகள் பரவுகின்றன. இதனால் அப்பகுதிகளில் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் முதுமக்கள் தாழிகளை குறிவைத்து தோண்டி உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர். வரலாற்று சின்னங்களாக இருக்கவேண்டிய முதுமக்கள் தாழிகள் தற்போது சமூக விரோதிகளால் அழிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து முதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்துவரும் தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வெற்றித்தமிழன் கூறும்போது, ‘சாஸ்திரம்பாக்கம், பழவேரி, திருமுக்கூடல் உள்ளிட்ட செங்கல்படை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகள் கற்காலத்துடன் தொடர்புடையதாகும்.

பாதுகாக்க கோரிக்கை

இங்கு முதுமக்கள் தாழிகள் மட்டுமல்லாமல் கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதங்களும் இப்பகுதியில் காணப்படுகிறது. இப்பகுதிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தவேண்டும் என ஆதாரங்களோடு கோரிக்கை வைத்து 8 வருடங்கள் ஆகிய நிலையிலும், இதுநாள் வரையில் ஆய்வு மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக கற்கால சின்னங்கள் சமூக விரோதிகளால் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன’ என்று கூறினார்.

எனவே கற்கால சின்னங்களை பாதுகாக்க தமிழக அரசும், தொல்லியல் துறையினரும் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு முதுமக்கள் தாழிகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்’.

Next Story