மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்: அண்ணன்-தம்பி பலிவேன், தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்: அண்ணன்-தம்பி பலிவேன், தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Sep 2019 10:30 PM GMT (Updated: 11 Sep 2019 8:20 PM GMT)

கீழப்பழுவூரில் மோட்டார் சைக்கிள்-வேன் நேருக்குநேர் மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி உயிரிழந்தனர். இந்த விபத்தில் வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மதராசா சாலையை சேர்ந்தவர் முஹிப்புல்லா. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பாயிஜ் (வயது 25), ஜமீல் (22) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் 2 பேரும் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தந்தை முஹிப்புல்லாவுக்கு தெரிந்த ஒருவர் மூலம் மருந்து, மாத்திரைகள் கொடுத்து விடுவதற்காக நேற்று காலை பெரம்பலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை நோக்கிச் சென்றனர்.

காலை 10 மணியளவில் அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கீழப்பழுவூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றனர். இதேபோல் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் இருந்து அரியலூரில் நடக்கும் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்த 14 பேர் ஒரு வேனில் வந்தனர். இந்நிலையில் கீழப்பழுவூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே, வந்தபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இதில் சகோதரர்களான பாயிஜ், ஜமீல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களில் வேன் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனை கண்ட வேனில் இருந்தவர்கள் அலறியடித்தவாறு, கீழே இருந்து இறங்கி நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆனாலும் வேன் டிரைவர் செல்வம் உள்பட 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. தீ வேன் முழுவதும் பரவி எரிய தொடங்கியது. வேனுடன் சேர்ந்து பாயிஜின் உடலும் எரிந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து வேனின் மீதும், பாயிஜ் மீதும் எரிந்த தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும், வேன் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது.

Next Story