‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்தது


‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்தது
x
தினத்தந்தி 11 Sep 2019 10:30 PM GMT (Updated: 11 Sep 2019 6:52 PM GMT)

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

சென்னை, 

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

தூய்மை இந்தியா திட்டம்

ரெயில்வே அமைச்சகம் சார்பில் ‘ஸ்வாச் பாரத்’ எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி நேற்று சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் முன்னிலை வகித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் இன்று(அதாவது நேற்று) முதல் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு, வருகிற அக்டோபர் 2-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தொடங்கி உள்ளோம்.

மறுசுழற்சி எந்திரங்கள்

சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும், தூய்மையை கெடுக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க, அதனை அரைத்து தூளாக்கி மறுசுழற்சி செய்யும் வகையில் 4 எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் அந்த 4 எந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். ரெயில் நிலையங்களில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கோட்ட துணை மேலாளர்கள் முகுந்த், மனோஜ் மற்றும் சென்டிரல் ரெயில் நிலைய இயக்குனர் குகனேசன், ரெயில்வே ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர். எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெயில் நிலைய இயக்குனர் ஜெய வெங்கடேசன் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Next Story